அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் தரப்புக்கும் அழைப்பு ...
தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் (நாளை மறுதினம்) தொடங்குகிறது. அத்துடன் இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது போன்ற போலி வாக்காளர் அட்டைகளால் ஏற்படும் குழப்பங்களை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலோசனை நடத்த, நாளை மறுதினம் தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிமுக-வுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக அலுவலகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பத்துறை ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அதிமுக சார்பில் எடப்பாடி தரப்புக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ் தரப்பிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருக்கிறார்.