ஈபிஎஸ் நீக்கம் - தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்!
இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக பிரிந்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைத்திலிங்கத்தை நியமிப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் பற்றிய தகவல்களை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ், தனது கடிதத்தினை அனுப்பியுள்ளார். அத்துடன் ஜேசிடி பிரபாகர். மனோஜ் பாண்டியன் நியமனம் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
இதனிடையே அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது இது தொடர்பாக மூன்று வாரத்திற்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.