அதிமுக அலுவலக கலவர வழக்கு - ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

 
ep

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சி.பி.யு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சி.வி சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேடில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

admk office attack

இதனிடையே இந்த வழக்கு தமிழக அரசால் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரி டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா மற்றும் செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேர் இந்த விசாரணைக்காக ஒரு குழுவாக நியமிக்கப்பட்டனர். இந்த சிபிசிஐடி அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஏழாம் தேதி மற்றும் 15ஆம் தேதி என இரண்டு தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தினுள் சென்று நேரிடையாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரடியாக ஆஜரானார். இதேபோல் இபிஎஸ் ஆதரவாளர் சிவி சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர்.  இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்