#BREAKING : அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓ.பி.எஸ் மனு தள்ளுபடி

 
supreme court

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார்.  இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே அசம்பாவிகளை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது.   

op

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பண விவகாரங்களில் பன்னீர்செல்வம் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது. என அந்த பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீசெல்வம் எவ்வாறு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிமை கோர முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை தவறு என கூற இயலாது என கூறி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.