பிரதமர் மோடியை தனித்தனியே வரவேற்கும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்

 
tn

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வடித்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதனால் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.  இதனிடையே அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதுடன்,  ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.  ஆனால் இதை ஏற்க மறுத்த  ஓபிஎஸ் , எடப்பாடி பழனிசாமியை  கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இப்படியாக அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நிலவிக் கொண்டே வருகிறது.

tn

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை ஈபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியே வரவேற்கின்றனர்.  விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஐஎன்எஸ் அடையாறில் ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்கின்றனர்.  44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.  இன்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்க உள்ள நிலையில்,  முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது .

tn

அதன்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும்  பிரதமரை தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோதும்,  அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதும் இருவரையும் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.