அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல்

 
Ops

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
 
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.

ops

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.