அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்: ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் ஆகஸ்ட் 17ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை இருநபர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இன்று அறிவித்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து ஓபன்னீர்செல்வம் மேல்முறையீடு தொடரவிருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” எனக் கூறினார். வ உ சிதம்பரனாரின் இல்லம் பராமரிப்பின்றி கிடைக்கின்றது என செய்தியாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்வியை ஆளும் கட்சியின் அமைச்சர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறினார். தொடர்ந்து எழுப்பப்பட்ட புதுமைப் பெண் திட்டம் குறித்த கேள்விக்கு?? நீடோடி வாழ்க என பதிலளித்துவிட்டு சென்றார்.