இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? - ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

 
ops

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இருப்பினும் இருதரப்பினருக் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு கோரி வருவதோடு, வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.