மோடி, ஸ்டாலினுக்கு எதிராக நோட்டீஸ் - குண்டுகட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றப்பட்ட சகோதரிகள்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துக்களை அச்சிட்ட நோட்டீஸ்களை இரண்டு இளம் பெண்கள் ஈரோடு பேருந்து நிலைய பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர் என்று போலீசாருக்கு தகவல் சென்றிருக்கிறது. இதை அடுத்து பேருந்து நிலைய பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பெண்களிடமும் இருந்த நோட்டீசை பறித்தனர்.
அந்த நோட்டீசில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துகள், வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை பார்த்த போலீசார் அந்த இரண்டு இளம் பெண்களையும் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அந்த இரண்டு இளம் பெண்களும் விசாரணைக்குச் செல்ல மறுத்து , போலீஸ் ஜிப்பில் ஏற மறுத்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் அந்த இரண்டு பேரையும் மகளிர் போலீசார் குண்டுகட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளம் பெண்களும் நந்தினி(29), நிரஞ்சனா(24) என்பது தெரிய வந்தது.
மதுரை மாவட்டம் கே. புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த நந்தினி தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவர். இவர் கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் . விவரங்களை அறிந்த போலீசார் 151 பிரிவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்தினி, நிரஞ்சனாவை கைது செய்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே இரண்டு பேரையும் ஜாமினில் விடுவித்து விட்டனர்.
தேனி பகுதியிலும் இதே மாதிரி நோட்டீஸ் விநியோகம் செய்து கைது செய்யப்பட்டு பின்னர் சகோதரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.