ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில்லை.. - சரத்குமார் அறிவிப்பு..

 
Sarathkumar


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று  சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிருகிறார்.  அதிமுகவின் இரு அணிகளும் தனித்தனியே களம் காணும் நிலையில், வேட்பஆளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் மற்ற கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி

மேலும், நேற்று மாலை மீண்டும் உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில் முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர. சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும்  சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.