பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை இல்லை - டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டம்..

 
Tasmac

டாஸ்மாக்கில்  மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்துள்ளார். அதில்,  டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து,  தமிழக அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும்,  மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள  5 லட்சத்திற்கு மேற்பட்ட  தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும்  என்றும் கூறியிருந்தார்.  

high court
 
இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க கட்டுப்பாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  பிளாஸ்டிக் பாட்டில்களில் மது  விற்பனை செய்யவேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்தார்.  இதற்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாகம்  தாக்கல் செய்த மனுவில்,  மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்றும்,  டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதால் அரசினுடைய வழிகாட்டுதல்படியே செயல்படும் என்றும் தெரிவித்திருந்தது.  அதேவேளையில் தற்போது வரை மதுவை நெகிழி பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியது.  

  டாஸ்மாக்

இந்த வழக்கு  இன்று  மீண்டும் நீதிபதிகள்  கிருஷ்ணகுமார், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மதுவிலக்கு துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தது. மேலும் டாஸ்மாக் நிர்வாகம்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ், தற்போதுவரை  டாஸ்மாக் மதுபான கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் திட்டம்  ஏதும் இல்லை என்று உறுதியளித்தார். இதனை பதிவு செய்துகொண்ட  நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.