"இரட்டை இலை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது"- வி.கே.சசிகலா பேட்டி
இரட்டை இலை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி 27 வது நிறுவனர் தினம் மற்றும் நுண்கலை வார விழா நிகழ்ச்சியில் வி.கே. சசிகலா பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இரட்டை இலை சின்னத்தை எக்காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. தொண்டர்களின் முடிவே என் முடிவாக இருக்கும். நான் தனிப்பட்ட முடிவு எடுப்பதில்லை . நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவார். தேர்தல் சமயத்தில் பெட்டியை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சென்று மனுக்களை பெற்று ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
மு.க. ஸ்டாலின் பெற்ற கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டியின் சாவி தொலைந்து விட்டதாக கருதுகிறேன் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் , ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தீய சக்தியான திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன் . பாஜகவால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என் நிழலைக் கூட யாரும் நெருங்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.