நீட் மசோதா - குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர் ; முதல்வர் சொன்ன முக்கிய தகவல்!!

 
tn

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி  கடந்த செப்டம்பர் மாதம்  தமிழக அரசு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீட் விலக்கு மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி  ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.   நீண்ட காலமாக இதுகுறித்து மௌனம் சாதித்து வந்த ஆளுநர் நீட் விலக்கு சட்ட மசோதாவை  திருப்பி அனுப்பினார்.  இதனைத்தொடர்ந்து மீண்டும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடி, நீட் விலக்கு  மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் ஆளுநர் ரவி இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியிடம் நேரில் இதுகுறித்து வலியுறுத்திய நிலையில், ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தையும் தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவித்தார். தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.

tn

இந்நிலையில்  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம். இதுதொடர்பாக மாண்புமிகு ஆளுநர் அவர்களை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், மாண்புமிகு பிரதமர் அவர்களையும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களது அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.

RN Ravi

இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்என்ற தகவலை மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயலர் அவர்கள் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்" என்று தெரிவித்தார்.