புதிய கல்வி கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம் - சீமான் காட்டம்

 
seeman

புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும் எனவும், அது குழந்தைகளுக்கான மரண சாசனம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே. 

seeman

உக்ரைன் போரினால் மருத்துவம் படித்த மாணவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர். இந்தியா வந்தவர்கள் இந்தியாவில் படிப்பு தொடர் முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்தியாவில் படிக்காமல் இருப்பதே நல்லது. வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனம் உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும் அவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும். ஜி-ஸ்கொயர் நிறுவன சொத்துகள் குறித்த வில்லங்கங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெறமுடியாத நிலையை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.