காதலை கைவிட மறுத்த மகள்...கழுத்தை நெறித்து கொலை செய்த தாய் - நெல்லையில் பயங்கரம்

 
murder

நெல்லை சீவலப்பேரி அருகே காதலை கைவிட மறுத்த மகளை, தாய் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை சீவலப்பேரி அருகே பாலாமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பேச்சி-ஆறுமுக கனி தம்பதிக்கு அருணா என்ற 19 வயது மகள் இருந்தார். பேச்சி சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மகள் அருணா கோவையில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருணா விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு தாயுக்கும், மகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். 
 
இதனையடுத்து இருவரையும் மீட்ட அவர்கள், நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றர். அங்கு பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர்.

அதில் அருணா கல்லூரியில் படித்தபோது ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுக கனி தனது மகளின் கையை அறுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு, தானும் கையை அறுத்துக்கொண்டும், ஹேர் டை குடித்தும் தற்கொலைக்கு முயன்றார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.