நெகடிவ் வந்தால்தான் வாய்ப்பு.. செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு செக்..
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருந்தாலும், அதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழலில், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்முதலில் ஆப்ரிக்கா நாட்டில் தோன்றிய குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. அதிலும், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் என மொத்தம் 60 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவில் இருந்து கேரளா வந்துள்ள இளைஞர் ஒருவர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவரைத் தொடர்ந்து இன்று மற்றும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்லப்பட்டாலும், உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் உயிரைப் பறிக்கும் அபாயம் கொண்டதாகும்.. அத்துடன் பரவும் தன்மை கொண்டிருப்பதால் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதன்காரணமாக ச்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பிரியாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக மருத்துவ துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.