அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை.. நவ.10ல் கனமழைக்கு வாய்ப்பு..
வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
3 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நவ.10ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூ,ர் நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் அகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நவ. 11ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..