ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை..
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மாரகராட்சி மாளிகை ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்ற வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு , மா சுப்பிரமணியன் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நிர்வாகத் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனுக்குடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தென் சென்னை, மத்திய சென்னையில் ஒரு சில இடங்களிலும், வடசென்னையில் புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம் போன்ற பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆகையால் உடனடி மீட்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அருகில் உள்ள கால்வாய்கள் வழியாக வெளியேற்றுவதற்காக 450 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. அதன்படி தற்போது 156 இடங்களில் உடனடியாக மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மரங்கள் முறிந்தாலும் அல்லது மின் கசிவு, மின்விபத்து ஏற்பட்டாலும், சாலை விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மரங்கள் முறிந்தால் சென்னை மாநகராட்சியின் 1913 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், மழை தண்ணீர் தேங்கியுள்ளது உள்ளிட்ட இதர பிரச்சனைகள் தொடர்பாகவும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.