"ரூ.500-க்கு ரூ.5000 பில் போட்ட அதிமுக அரசு"அமைச்சர் பெரியகருப்பன் குற்றச்சாட்டு
500 ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி.பல்புகளை 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய அரசு தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினார்.
ஊரக உள்ளாட்சி துறையில் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் தொடர்பாக பேனர் வைத்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தபோது புகார் மனு அளித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன்,“நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் அங்கன்வாடிகள், பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பேனர் வைத்துவருகின்றனர். உரிய முறையிலே வைக்கப்பட்டுவருகிறது.
எதிர்கட்சி தலைவர் ஆதாரமில்லாமல் புகார் தெரிவித்துள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியின்போது 500 ரூபாய் உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் ஒன்றிய அரசிடம் இருந்து உரிய நிதியை பெறமுடியாமலும், ஜனநாயக படுகொலை செய்த அரசு தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வரும் நிலையில், ஆதாரமில்லாமல் அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்த எதிர்கட்சி தலைவர் முயற்சி செய்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.