சட்டப்பேரவையில் கேள்விநேரத்தில் முதல்முறையாக பதிலளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தில் முதல்முறையாக பதிலளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அப்படி உள்ளது என்றால் எப்போது என்றும் அவர் வினவினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருப்பூரில் விளையாட்டு அரங்கம், தடகள ஓடு பாதை அமைக்கப்படும். உலகக்கோப்பை கபடி போட்டி தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் . இதன்மூலம் சட்டப்பேரவையில் கேள்விநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்