கடன்சுமையால் மின்சார வாரியத்தை இழுத்து மூட வேண்டிய நிலை - அமைச்சர் செந்தில்பாலாஜி

 
senthil balaji

கடன்சுமையால் தமிழக மின்சார வாரியத்தை இழுத்து மூட வேண்டிய நிலை இருந்ததால் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:  வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட மிக குறைந்த மின் கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது. திமுக அரசு ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது.  மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.