மாதம்தோறும் மின் கணக்கீடு நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி..
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.27.50 ம், 2 மாதங்களுக்கு 300 - 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.147.50 வரையிலும், 501 -600 யூனிட்கள் பயன்படுத்தினால் ரூ.155 வரையிலும் கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மின் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தினார். அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். அதன்பிறகு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என விரும்புபவர்கள் கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்தார். மேலும், வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றார். அதன்பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.