மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக்கட்டு மைதானம் - அமைச்சர் தகவல்

 
Meyyanathan

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக் கட்டு மைதானம் கொண்டு வரப்படும் என தமிழக சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: வரும் காலங்களில் உலக அளவில் பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடப்பது நடைபெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.  மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக் கட்டு மைதானம் கொண்டு வரப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்றுவதற்கு விரைவில் சட்டத்தில் விதிகளை திருத்தி சட்ட முன் வரைவு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வரும் காலங்களில் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். 

நெகிழி பயன்பாடு ஒழிப்பது என்பது மக்கள் முன் வந்தால் மட்டுமே முடியும். மக்கள் இயக்கமாக இதை மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.