பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் - அமைச்சர் உறுதி

 
Minister sakkarabani

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா  ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் 8ம் தேதி வரை நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். 

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.