ஆளுநர் மாளிகையில் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது - அமைச்சர் ரகுபதி

 
ragupathi

ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது கவர்னர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை.  மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கவர்னர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழக ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும். 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.