அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

 
ptr

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், மதுரையில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை எனவும், ஊழல் மட்டுமே நடந்துள்ளதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மதுரையில் 1,295 சதுர அடி பரப்பளவில், 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். 

ptr

 இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும். நாடளுமன்றக் கூட்டம், சுதந்திர தினம் வருவதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளி போகிறது. அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக் கொண்டோம்.மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சிறப்பு பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சி காலத்திற்க்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை பிரச்னைகளைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.