ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் சாத்தியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நர்சுகளின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை, இடஒதுக்கீடு விதிமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா கால நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக 2300 தற்காலிக செவிலியர்கள் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களது பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பணி நீட்டிப்பு கிடையாது என அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள்,  பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார். 

Vijayabaskar

ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.  இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர்கள் மத்தியில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த செவிலியர்கள் அனைவரும் கடந்த ஆட்சியின் போது அவசரகால தேவைக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாத நிலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அவர்களை பணி நீக்கம் செய்யாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.   போராடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அதேநேரம் உண்மை நிலையை அறிந்து போராட வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நர்சுகளின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை. இடஒதுக்கீடு விதிமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்?. இவ்வாறு கூறினார்.