ஐடிஐ மாணவா்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு: அமைச்சா் சி.வி. கணேசன்
தமிழ்நாட்டில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் திட்டத்திற்காக 2,800 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கி உள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அங்கு பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடி நன்றாக பயிற்சி மேற்கொண்டால் உறுதியாக வேலை கிடைக்கும் என்று ஒவ்வொரு மாணவரிடமும் நம்பிக்கையை ஊட்டியவர். அங்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்த அவர், தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், “தமிழ்நாட்டில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நவீன தொழில் நுட்ப இயந்திரங்கள் அமைத்து, மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெறும் வகையில் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு தலா 30 கோடி வீதம் 2800 கோடி ரூபாய் முதலமைச்சர் வழங்கியுள்ளார். படித்துமுடித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் முதலமைச்சர் உள்ளார். இன்னும் இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைப்பதே சிரமம் என்கிற நிலை நிச்சயம் உருவாகும். ஐடிஐ மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்” என தெரிவித்தார்.