தன்னம்பிக்கையுடன் இருங்கள்...தற்கொலை எண்ணங்கள் வேண்டாம் - அமைச்சர் அறிவுரை

 
anbil-mahesh-3

எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது எனவும், உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  மனரீதியாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஹெல்ப்லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

anbil magesh

எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை. நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கின்றோம். சமீபத்தில் கேரளா வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்