மேல்மருவத்தூர் ஆடிப்பூரம் விழா : செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயில், மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 1972-ம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 51வது ஆடிப்பூரம் விழா கோலாகலமாக வரும் 1-ம் தேதி ( நாளை ) நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பக்தர்கள் ஆடிப்பூர விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.
இந்நிலையில், மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுா் விடுமுறை நாள், ஆகஸ்ட் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக ஈடு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.