சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’ திட்டம் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்..
Updated: Jul 30, 2022, 23:11 IST1659202874140
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு மெகா ஸ்ட்ரீட் அமைக்கும் திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் சீர் செய்ய வேண்டிய குறைகள் குறித்து பேசினர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- அதில், “விளம்பர பலகைகள் மீதான விளம்பர வரி குறித்த தணிக்கை தடைகளை நீக்க, அரசின் கருத்துரு பெற அரசுக்கு செயற்குறிப்பு அனுப்புவது.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்டது மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய திருத்திய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்வது.
- அனைத்து சென்னை பள்ளிகளிலும் பள்ளி இல்ல நூலகம் அமைத்து செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் வழங்குவது.
- குறிப்பாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் நான்கு இடத்திலும் அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்குவது
- சென்னை முழுவதும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் போதிய வெளிச்சத்தை மேம்படுத்த எல்இடி விளக்குகளுடன் கூடிய உயர் கோபுர மின் விளக்குகளை 68.99 கோடி மதிப்பீட்டில் நிர்பயா நிதி மூலம் அமைப்பது.
- அதேபோல் , சென்னையில் உள்ள 87 சாலைகளில் 117 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெருக்களை மேம்படுத்த வழிவகை செய்யும் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ்’ திட்டத்திற்கான அரசின் நிர்வாக அனுமதி கோரும் தீர்மானம் ” உள்ளிட்ட 98 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.