மீரா மிதுன் தலைமறைவு - லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு..
மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகையான மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மீரா மிதுனை காணவில்லை எனவும், தனது மகளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும், மீரா மிதுனின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில், மீரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மீரா மித்ரன் தலைமறைவாக உள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்ற பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.