காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு - சென்னையில் மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு

 
Medical Camp

காய்ச்சல் தாக்கம் அதிகரித்து இருப்பதால் சென்னையில் இன்று கூடுதலான மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 6 ஆயிரத்து 860 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 1,798 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. காய்ச்சல் தாக்கம் அதிகரித்து இருப்பதால் சென்னையில் இன்று கூடுதலான மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது. எல்லா முகாம்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பார்கள் எனவும், பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது உறுதியானால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சாதாரண காய்ச்சலுக்கும் ஹெச்-1 என்-1, கொரோனாவுக்கான அறிகுறிகளே காணப்படுவதால், தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளும்படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் இந்த முகாம்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.