என்னிடம் முறையிட்டிருக்கலாம்.. இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் - ஓபிஎஸுக்கு தனி நீதிபதி கண்டனம்..

அதிமுக வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட்டது குறித்து தனி நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவினை நடத்திக் கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம்- வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் . இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து இந்த வழக்குகளை இன்று முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் வைரமுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. அவருக்கு பதிலாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சியின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கை பெறும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார் என்றும், நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார் என்றும் வழக்கிற்கு சம்மந்தமில்லாத கருத்துகளை தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து தலைமை நீதிபதி அளித்துள்ள பதிலில், அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலனை செய்தும், சம்பந்தப்பட்ட தனி நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும். வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து தற்போது நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் தலைமை நீதிபதியிடம் முறையிட்டது, நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனிநீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையில் செயல்பாடு உள்ளது என்றும், தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்று கூறினார். .
அத்துடன், அதிமுக பொதுக்குழு வழக்கை நானே விசாரிப்பேன் எனவும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை பிற்பகல் 2.15க்கு விசாரணைக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.