ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு?

 
kamal

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. 

Erode East

இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பாமக போட்டியில்லை என அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 

congress

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் நாங்கள் பிரித்த ஓட்டுகளே பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான த.மா.கா. யுவராஜாவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.