முக்கிய முடிவெடுக்கனும்.. கூட்டம் ஏற்பாடு செய்யுங்க.. - திரையரங்க உரிமையாளர் சங்கம் எழுதிய அவசர கடிதம்..
திரைப்படங்களை ஓடிடி வெளியீடு குறித்து ஆலோசிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. இதனால் வசூல் ரீதியாக பாதிப்பு பாதிப்பு எற்படுவதாகவும், ஒரு படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய படங்களை ஒடிடியில் வெளியிடுவது குறித்து, முக்கிய முடிவெடுக்க ஆலோசனை நடத்த திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கிய மறைந்த முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி, சங்கத்தின் மூத்த முன்னோடி மறைந்த முன்னாள் தலைவர் ராமநாராயணனின் காலம் வரை திரையுலகம் பொற்காலமாகவும் சீரோடும் சிறப்போடும் சங்கம் செயல்பட்டு வந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை ஓடிடி-யில் திரையிடுவதால் திரையரங்குகள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஓடிடி-யில் திரைப்படங்களை வெளியீடு செய்வது பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளதால் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்து அதில் தாங்கள் தங்களுக்கு வசதியான ஒரு தேதியினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.