ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..

காவல் துறையினரின் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாகவும், தனக்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜா ராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை, அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அத்துடன் ஓ. .பன்னீர்செல்வம், தற்போது அரசியலிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளையந்தியைரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.