ரூ.100 அட்வான்ஸ் கொடுத்து என் காரை எடுத்து சென்ற டி.ஆர்.பாலு இன்றும் எனக்கு கடன்காரர்- மு.க.ஸ்டாலின்
![mkstalin](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7574e4a409e329303a7c10782c4fb2ca.png)
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய ‘பாதை மாறாப் பயணம்’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பாகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
அதன்பின் எம்.பி. டி.ஆர்.பாலு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த டி.ஆர்.பாலு, 80 வயது வரை ‘ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை’ என்ற கொள்கைப் பிடிப்போடு உள்ளார். 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் காரை வாங்கினாரு, இன்று வரை மீதி பணத்தை கொடுக்கவில்லை.. அவர் இன்னைக்கும் எனக்கு கடன்காரர்தான். என்னை விட அவருக்கு 10 வயசு அதிகம் ஆனால், நாங்க எங்களுக்குள் வாயா போயா என்று தான் பேசிப்போம், அந்தளவு எங்கள் நட்பு. நான் வீட்டில் இருந்ததைவிட டி.ஆர்.பாலு அலுவலகத்தில் இருந்ததுதான் அதிகம்; முதன்முறையாக ‘இளந்தென்றல்’ என்ற பட்டத்தை எனக்கு சூட்டியவர் டி.ஆர்.பாலு. கொள்கை பிடிப்புக்கு எடுத்துக்காட்டு டி.ஆர்.பாலு.
மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு நெருக்கமானது. பாலு அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். அதுதான் எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது. சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர்.பாலு. அவர் 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். இப்போதுகூட அவரது நடை, உடை ஒன்றிய அமைச்சர் போன்றே இருக்கும்” எனக் கூறினார்.