இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.. - ஆட்சியர் அதிரடி உத்தரவு..
திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை வெகு விமரிசையாக நடைபெற்றது. பூகோல வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதுமாக அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைத் தேர்த்திருவிழா 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டிற்காக சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21 ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் அரங்கநாத பெருமாள் பல்வேறு வாகங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி இன்றையதினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இன்று தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும், இன்றைய விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிப்பதற்காக மட்டும் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த ஊழியர்களோடு செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் கூறியிருக்கிறார். மேலும் இன்றைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற மே 7 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.