5 மாவட்டங்களில் இன்றும் , நாளையும் கனமழைக்கு வாய்ப்பு...

 
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுவடைந்தது. தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களிலும் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை

மேலும், செப்.13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.