மாணவிகளை கையேந்த விடுவதுதான் புதுமைப்பெண் திட்டமா?? யார் கேட்டா?? - சீமான் கடும் தாக்கு..
தமிழக அரசின் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவிகளை கையேந்த வைப்பதுதான் புதுமைபெண் திட்டமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “ரூ. 696 கோடி செலவில் மாணவிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்து வைக்க தகர சீட்டில் ஒரு சேமிப்பு கிடங்கு கட்டி அதை பாதுகாக்க வைக்க முடியதா? விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் அப்படியே தார்ப்பாயை போட்டு மூடி நனைய விட்டுள்ளது அரசு. விவசாயிகளின் உழைப்பிற்கு மரியாதை தரவில்லை. பெண் பிள்ளைகள் படிப்பதற்கு கையேந்த விடுகிறது தமிழக அரசு. அந்தப் பெண் பிள்ளைகளின் தந்தையின் காசை எடுத்துக் கொடுக்கிறது. இது என்ன புதுமைப்பெண் திட்டம். நீங்க படைக்கப் போகிற புதுமையா இது?.. கல்வியை முதலில் தரமாக கொடுக்க வேண்டும். அரசு தரும் அத்தனையும் தரம் இல்லாமல் இருக்கிறது.
முதல்வரே நிதி போதுமானதாக இல்லை; ஆகையால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க முடியவில்லை என்று கூறினார். ஆனால் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் வழங்க நிதி எங்கே இருந்து வந்தது. மாணவிகள் இந்த தொகையை கேட்டார்களா?? எல்லாம் பொறுப்பற்ற செயலாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாகிவிட்ட நிலையில் வேறொன்றுமாக பேசுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவே இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு சொல்லுகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அது 8 வழிச்சாலை திட்டம்; ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அது பயண நேர குறைப்பு சாலை என்கிறார்கள்.
மத்திய அரசுக்கென சொந்தமாக ஒரு விமானம் கூட கிடையாது. ஆனால் 5000 ஏக்கரில் விமான நிலையம் கட்டுகிறோம் என்கிறார்கள். கடலுக்குள் கருணாநிதி நினைவாக பேனா வைப்பதும், பரந்தூர் விமான நிலையம் கட்டுவதும் நடக்கவே நடக்காது. பரந்தூர் விமான நிலைய மதிப்பீடு 40,000 கோடி எனில் , குறைந்தது 15 ஆயிரம் கோடி அடிக்கலாம் என கணக்கு போடுகின்றனர். இந்த விமான நிலையத்தை அதானியை கட்ட விட்டால் என்னை போன்றவர்கள் சண்டை போடுவார்கள்; ஆகையால் அரசாங்கமே விமான நிலையத்தை கட்டிக் கொடுக்கிறது”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியை சகிக்க முடியாமல் தான் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பாஜக அதனை இப்போது தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைவு தான் பாஜக ஆட்சி. அரை நூற்றாண்டாக ஆண்ட நேரு குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட வறுமை, வேலை வாய்ப்பின்மையால் ஏற்பட்ட நிலை என்ன என்பதை கிராமம்தோறும் ராகுல் காந்தி சென்று அறிந்து கொள்ளத்தான் வேண்டும். அதனால் ராகுல் காந்தி 5 மாதம் நடை பயணம் செய்வதை வரவேற்கிறேன்” என்று சீமான் கூறினார்