தேவர் ஜெயந்தியையொட்டி தலைவர்கள் மரியாதை..
தேவர் குருப்பூஜையை ஒட்டி அவரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்..
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத் தேவருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் திமுக அமைச்சர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக 7:50 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 9 மணிக்கு ஓ.பன்னீர் செல்வமும், அமமுக சார்பில் 10 மணிக்கு டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சசிகலா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல் தூத்துக்குடியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.