2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்- எல்.முருகன்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோவில் பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எலச்சிபாலையம் ஒன்றியம் கோவில் பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைக்கப்பட்ட நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், “மத்திய மோடி அரசு இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் குடியிருக்க சொந்த வீடு கட்ட மானியம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் என அனைத்து குடிமகன்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும் 2047 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நூறாவது சுதந்திர தின விழா வருவதற்குள் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்த நாடாக இந்தியா இருக்கும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணை தலைவருமான கே பி ராமலிங்கம் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரளான மக்கள் பங்கேற்றனர்.