10-ம் வகுப்பு மாணவியை கடத்திய கொத்தனார் கைது
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற கொத்தனாரை போலீசார் கைது செய்துள்ளனர் . அவரிடம் இருந்த மானவி மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அடுத்த மொலாண்டிபட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இந்த 23 வயது இளைஞர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். சுபாஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார். பள்ளிக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொத்தனார் சுபாஷ் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள் .
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
சுபாஷ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.