கொடநாடு கொலை வழக்கு- ஆத்தூரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக விபத்து நடந்த பகுதியில் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23- ஆம் தேதி கொலை, கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் (50) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்.28 ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கு விசாரணையை ஆத்தூர் நகர போலீஸார் மேற்கொண்டனர். அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த செந்தில்குமார், கார் ஓட்டுநர் கனகராஜ், சாலை விபத்தில் தான் இறந்தார். அவர் மது அருந்தியிருந்தார் என தெரிவித்திருந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கனகராஜ் சாலை விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவின் பேரில் இன்று சாலை விபத்து நடந்த இடத்தில் எஸ்.பி. மாதவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் .