இதெல்லாம் ஒரு பொழப்பு.. ஆ.ராசாவை சாடும் கஸ்தூரி

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா..இதெல்லாம் ஒரு பொழப்பு என்று ஆ.ராசாவை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அண்மையில் சென்னையில் நடந்த விழாவில், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்ட திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
’’உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது . இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ’’ என்று கேட்டார் ஆ.ராசா.
’’இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? ’’ என்றும் கேட்ட ராசா, ‘’இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும் திமுகவும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது’’ என்றார்.
ஆ. ராசா பேசிய இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஆ . ராசா இந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா? அவரது பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
இப்படி எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் ஆ. ராசா தனது வலைத்தள பக்கத்தில், ’’சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?’’ என்று கேட்டு மீண்டும் கொந்தளிக்க வைத்திருக்கிறார்.
’’சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு’’என்று கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரியின் இந்த கருத்துக்கு எதிராக திமுகவினர் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம், தலைவர் குடும்பம் பின்பற்றினால் அது தனிப்பட்ட நம்பிக்கை. பொதுமக்கள் கோவிலுக்கு சென்றால் அது மத வெறியா? இந்த பொது அறிவை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் சொல்லுங்க என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் மனைவி, மகள், மருமகன் ஆகியோர் கோவில் கோவிலாக சென்று பூஜைகள் செய்து வருவதை வைத்து இவ்வாறு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.