கள்ளக்குறிச்சி கலவரம் : சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 56 போலீசார் நியமனம்..
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு மற்றும் அதற்கு பிந்தைய கலவரம் தொடர்பான விசராணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவில், கூடுதலாக 56 போலீசார் நியமித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் , கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி . இவர் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்., இந்த விவகாரம் குறித்து, கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து 3 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஏற்கனவே 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 56 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 56 பேரும் சேலம் சரக டிஐஜி தலைமையிலான 18 அதிகாரிகளின் கீழ் 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்றுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.