கள்ளக்குறிச்சி கலவரம்: 'போராட்டத்தில் மாணவியின் உறவினர் யாரும் இல்லை' - வாட்ஸ் அப் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்..
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்தில், மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது . ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. இன்று பள்ளி முன்பாக அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசியதோடு, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகள் அனைத்திற்கும் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்திருந்த போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற, டிஐஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனவும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் மாணவியின் உறவினர்கள் இல்லை என்றும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். போராட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது கலவரம் வெடித்ததால், உறவினர்கள் அனைவரும் பாதி வழியில் திரும்பி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், போராட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மாணவி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் என்கிற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் திரண்டதும் தெரியவந்துள்ளது.