தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லித்தர தேவையில்லை - கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் எனவும், தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லித்தர தேவையில்லை எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூர் சத்துவாச்சாரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என சொல்லக்கூடாது, தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார். தமிழகத்தை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லித்தர வேண்டாம். தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு. இதுபோன்ற பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம். தமிழ்நாடு, ஆந்திர நாடு என பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா ஒரு தேசம். நாடு என்பது வேறு தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம் என்று நாம் சொல்லுகிறோம். அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. இதனால்தான் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி தெரிவித்தார். இவையெல்லாம் ஆளுநருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆளுநர் கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத்தில் உள்ளனர். கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.