நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்; மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை- கே.என்.நேரு

 
KN Nerhu

ஈரோடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தோழமை கட்சிகளின் மாண்பை காத்துள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 1519 பயனாளிகளுக்கு ரூ.937 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு முதலமைச்சர் வைத்துள்ளார். சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் தவிர்க்கப்பட்ட போது முதலமைச்சர் எப்படி கோபப்பட்டார் என நாம் அறிவோம். மக்கள் மீது கொண்ட அன்பால் இவ்வாறு செய்தார்.

ஈரோடு இடைத்தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். திமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்கான பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம். ஒன்றரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கின்றோம். ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம்.

திமுக நல்ல நிலையில் இருக்கின்றது. முதலமைச்சர் ஈரோடு இடைத்தேர்தலில் அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி தோழமை கட்சிகளின் மாண்பை காத்திருக்கிறார். நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம்...தேர்தலுக்கு போறோம்... நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” எனக் கூறினார்.